Friday, February 12, 2010

அண்ணாத்தல் செய்யாது அளறு


அண்ணாத்தல் செய்யாது அளறு!



நிறைய அன்பர்கள் கேட்டு விட்டார்கள். ’ஏன் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக
எழுதுவதில்லை’. நிறைய எழுதவேண்டும்தான். நேரம் கிடைக்கவில்லை என்று
நேரத்தின்மேல்ப் பழிப்போட விரும்பவில்லை. :-)

இதோ இப்போது எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இன்று, என்
இனிய நண்பர் சுரேஷிடம் பேசிக் கொண்டியிருக்கும் போது திருக்குறளில்
’அண்ணாத்த செய்யுமாம் அலரு’ அப்படி என்று வருமாமே, அதற்கு என்ன
பொருள் என்று கேட்டார். திடுதிப்புன்னு கேட்டா என்னாலச் சொல்ல முடியாது.
ஆனா ‘அண்ணாத்தல் செய்யாது அளரு’ என்று புலால் மறுத்தலில் வரும் குறள்
அது. கொஞ்சம் டைம் கொடுத்திங்கனா, பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று
அப்போதைக்கு நழுவினேன்.

ஆனாலும் புலால் மறுத்தல் அதிகாரத்தில் வரும் அந்தக் குறள் என் மனதில்
எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. வீட்டிற்கு வந்தவுடனே பரிமேலழகரைப்
புரட்டினேன்.

”உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு” - திருக்குறள் (255)

பரி என்னா சொல்றார்னா?..

”உயிர் நிலை ஊன் உண்ணமை உள்ளது -ஒரு சார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளரு அண்ணாத்தல் செய்யாது- ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின் அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்தற்கு அங்காவாது”.

அவரே தன் சிறப்புரையில் (விரிவுரை)..

”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்றார். ‘உண்ணின்’ என்பது ‘உண்ண’ எனத் திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் எனபதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின் பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது”.

அவரின், விரிவுரையில் ”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை” என்ற வாக்கியத்தை படித்தவுடன் திருக்குறளின் அத்தாரிட்டி என்று போற்றப்படும் ஒரு உரையாசிரியர் எப்படி இவ்வாறு எழுதினார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

என்ன சொல்லவரார்னா? விலங்குகளைக் கொன்று தின்றால் அவற்றின் எண்ணிக்கைகள் குறைந்துக் கொண்டே வருமாம். அதனால், ஊன் உண்ணாமல் இருப்பதே உயிர்நிலை என்று சொல்கிறார். ஊன் உண்ணாமலிருந்தால் அவைகள் பலவாக பெருகுமாம். இது எப்படியிருக்கு பார்த்திங்களா? லாஜிக் உதைக்கிறதே!

குறளின் உரை சரியில்லையே! பின் எப்படி உரை வரும்.

என் பார்வையில்

உயிரின் இயல்புகளில் ஊன் உண்ணாமையும் ஒன்று. Instinct Characteristics என்பார்களே அதுமாதிரி. ஊன் உண்ணாமை. அஃதாவது, உயிரின் பலப் பண்புகளில் ஊன் உண்ணாமை என்ற இயல்பும் ஒன்று. இது உயிரைப் பற்றியச் சமணப் புரிதல்.

’உண்ணாமை யுள்ள துயிர்நிலை’ - ஊன் உண்ணாமையே உயிரின் பண்பு அல்லது நிலை. உயிரின் பண்புக்கு மாறாக ஊன் உண்டால் மிகவும் அஞ்சத்தக்கக் கதியாகிய நரகக் கதிக்கு சென்று அழுந்திவிடுவீர்கள். அப்படி அழுந்தப் பட்ட உயிர் நரகத்தில் இருந்து வெளியே வரமுடியாது. நரகம் வழிவிடாது என்பதுதான் அக்குறளின் கருத்து.

இது இவ்வாறாருயிருக்க, ஊன் உண்டால் உயிர்கள் குறைந்துவிடும் என்று சொல்வது இங்கு பொருந்தாது. எவ்வாறெனின், உயிருக்கு அழிவில்லை. உடல்தான் அழிகிறது. மனிதக் குலம் இப்பூமியின் கண் தோன்றுவதற்கு முன்னமே, டைனாசோர் போன்ற விலங்குகள் இப்பூமியின் கண் இருந்து மறைந்ததாக நாம் அறிவோம். மனிதர்கள் உண்டா அழிந்துப் போயின? அல்லவே! இயற்கையாய் அவைகள் அழிந்துப்பட்டன.

இதனால், பரிமேலழகர் உரை இக்குறளுக்கு முற்றும் முரண்.


இரா.பானுகுமார்,
சென்னை.

4 comments:

Vino said...

sir, have a question may be you can clarify.. This was question posed on me in as an counter argument which I couldnot answer on the spot have been seeking someone's help. perhaps you can try .

When we say ourselves vegetarians we practice them by not hurting any animals(living thing/life). But there are plants which was scientifically proven they do have life.. we encourage them to get killed for eg., spinach. isn't this kinda against vegetarianism. in a essence how do we define vegetarianism to a westerner?

irungovel said...

O.K. Dear Mr Banukumar,

I agree with you. But, there was a lot of living beings are no more. For example so called Annam in literature, why not dinausaurus.

Has to keep more keen in the notes of Parimelalagar.
- IRUNGOVEL

Venkatasubramanian said...

பானுகுமார்

உண்ணப்படுபவை ஊன் தின்பதால் சிலவாகின்றன. அவை மீண்டும் பிறக்கையில் ஏனைய பிறவிகளில் பிறக்கும். இதுவே ஏனைய பலவாக என்று பரிமேலழகர் கூற வந்தது என்று எண்ணுகிறேன்.

Venkatasubramanian said...

மேலும் உயிர்நிலை என்று கூற வந்தது உயிர்களின் நிலைபேற்றையே. மணக்குடவர் அன்பின் வழியதுயிரநிலை குறட்பாவில் நிலைபேறு என்ற பொருளையே கையாள்கிறார். இந்தக் குறளிலும் அப்படியேயும் கையாளலாம் அல்லது மொத்த உயிர்க் கூட்டங்களின் சமநிலை (equilibrium) ஆகவும் கொள்ளலாம்.